Tuesday, September 2, 2014

எங்கெங்கும் "எத்தனால்' பயன்பாடு!

இந்தியாவில் முதல் முறையாக எத்தனால் எனும் எரி பொருள் மூலம் இயங்கும் பேருந்து ஓட்டத்தை மராட்டிய மாநிலம் நாகபுரி நகரத்தில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்துள்ளார்.

எத்தனால் என்கிற எரியெண்ணெய் விவசாய விளைபொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. பெட்ரோலுக்கு நிகரான எரிதிறன் கொண்டது. எத்தனால் என்பது உயிர் காற்றான ஆக்ஸிஜனை உள்ளடக்கிய நிறமற்ற ஒரு எரிதிரவம் ஆகும்.

பிரேசில் நாட்டில் எத்தனால் எனும் இந்த இயற்கை எரி பொருள் மூலம் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து எந்திரங்களும் இயக்கப்படுகின்றன. பிரேசில் நாட்டில் கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.

அமெரிக்கா போன்ற வல்லரசு நாட்டில் கூட, சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில் எத்தனால் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.

பிரேசில் நாட்டில் 1980-ஆம் வருடத்திற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களின் என்ஜின்களும் பெட்ரோல், எத்தனால் என இரண்டு வகையான எரிபொருள்களின் மூலமும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் எத்தனாலை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.

தற்போது இந்தியாவில் எரிவாயு, பெட்ரோல் இரண்டையும் பயன்படுத்தக்கூடிய வகையில் வாகனங்களில் பெட்ரோல் என்ஜின்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகன என்ஜின்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் தற்போது உள்ள நிலையிலேயே ஐம்பது சதவீதம் வரை எத்தனால் கலந்த பெட்ரோல், டீசலை பயன்படுத்தி நம் நாட்டில் வாகனங்களை இயக்கலாம்.

கடந்த 2002-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு, எரிபொருள்களுடன் ஐந்து சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம் என உத்தரவு பிறப்பித்தது. மத்திய அரசாங்கத்தின் அரசிதழில் அரசாணையாகவும் அது வெளியிடப்பட்டது.

மேலும், எத்தனாலை உற்பத்தி செய்வதற்குத் தேவைப்படும் மூலப்பொருள்களான விவசாய விளைபொருள்களை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தவும், கரும்பு மற்றும் மக்காச்சோள சாகுபடி நிலப்பரப்பை அதிகப்படுத்தவும், சர்க்கரை ஆலைகளிடமிருந்து எத்தனாலை கொள்முதல் செய்யவும், எத்தனாலுக்கு உற்பத்தி வரி விதிக்கலாமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கவும், எத்தனால் உற்பத்தி செய்வதற்கு தகுதியான எந்திரங்களை எங்கிருந்து வாங்கலாம், எப்படி வாங்கலாம், எந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யலாம் ஆகியவை குறித்தெல்லாம் ஆய்வு செய்யவும், மத்திய மாநில அரசுகளோ அல்லது எண்ணெய் நிறுவனங்களோ, எத்தனாலை மக்களுக்கு விநியோகிக்க உரிய வழிமுறைகளை செய்யவும், மேலும் எத்தனால் பயன்பாடு குறித்த பல்வேறு முடிவுகளை எடுக்கவும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

முதல் கட்டமாக, 2003-ஆம் வருடத்திற்குள் 9 மாநிலங்களில் இதனை செயல்படுத்தவும், தொடர்ந்து எத்தனால் பயன்பாட்டை பாரத நாடு முழுவதும் அதிகரிக்கவும் தனித்தனியாக கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

2017-ஆம் ஆண்டிற்குள் 20 சதவீதம் எத்தனால் கலந்த எரிபொருளை நாடு முழுவதும் கொண்டு வர வேண்டும் என அன்றைய உணவுத்துறை அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஏழு அமைச்சர்கள் மற்றும் திட்டக்கமிஷனை உள்ளடக்கிய கமிட்டியும் அமைப்பட்டது. கமிட்டிகள் இயங்காத நிலையிலேயே இருந்தன.

2007-ஆம் வருடம் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று, இந்தியாவிற்கு வருகை தந்த பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனெசியோ லுலாட சில்வா முன்னிலையில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எத்தனால் பயன்பாட்டின் மூலம் இந்தியாவில் பசுமையான சூழலை உருவாக்குவோம் என உறுதி மொழி கொடுத்தார்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சி முடிவடையும்வரை எத்தனால் பயன்பாடு இந்தியாவில் எங்கும் நடை முறை படுத்தப்படவில்லை.

12 வருடங்களுக்கு முன்பாக (2002-இல்) மத்திய அரசு எத்தனால் எரிபொருள் குறித்து பிறப்பித்த உத்தரவை யார் தடுத்தார்கள் என்பது புரியவில்லை. இதனால், இதுவரை ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு யார் பொறுப்பு என்றும் தெரியவில்லை.

தற்போது மோடி அரசு பதவியேற்று நூறு நாள்களுக்குள்ளாக மராட்டிய மாநிலம் நாகபுரி நகரத்தில் எத்தனால் எரிபொருள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

நமது நாட்டில் 70 சதவீத பெட்ரோலிய பொருள்களின் தேவை, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலமே தீர்க்கப்படுகிறது. நமது நாட்டின் எண்ணெய் கிணறுகள் மூலம் வெறும் 30 விழுக்காடு அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.

எரிபொருள் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கின்றன.

ஆண்டுதோறும் பெட்ரோலிய எரிபொருள் இறக்குமதிக்காக சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் இந்திய அரசு செலவழித்து வருகிறது. இதன் மூலம் நமது நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு பெரும் நஷ்டம் அடைகிறது.

பெட்ரோலிய பொருள்களில் எத்தனால் கலந்து உபயோகிப்பதன் மூலம் வருடத்திற்கு சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு நம் நாட்டின் அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. நமது நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. விலைவாசியும் விஷம் போல் உயர்கிறது. எண்ணெய் நிறுவனங்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவதன் மூலமும் மத்திய அரசுக்கு பெருந்தொகை செலவாகிறது.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, எத்தனால் பயன்பாட்டை 70 சதவீதம் பெட்ரோலியப் பொருள்களோடு கலந்து பயன்படுத்துவதே ஆகும். மீதி 30 விழுக்காடு எரிபொருள் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் தன்னிறைவு செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் எண்ணெய் இறக்குமதியைத் தவிர்க்கலாம். அனைவரும் அறிந்த இந்த உண்மையை நடைமுறைப்படுத்த கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் அரசு உரிய நடவடிக்கை எதையும் மேற்கொள்ளவில்லை.

மேலும், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களால் இயங்கும் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் வெளியிடும் கார்பன் காரணமாக பெருமளவில் புகை மாசு உருவாகி சுற்றுச்சூழல் பெரிதும் கெடுகிறது.

ஆனால், கரும்பு, மக்காச்சோளம், குச்சிக்கிழங்கு, உருளைக் கிழங்கு போன்ற விவசாய விளைபொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால் எரிபொருள் மூலம் வாகனங்கள் மற்றும் எந்திரங்கள் இயக்கப்படும் போது உயிர்காற்றான ஆக்ஸிஜன் பெருமளவில் வெளிப்படுகிறது. புகை, மாசு எதுவும் கிடையாது.

தாவரங்கள் நாம் சுவாசித்து வெளியேற்றுகின்ற கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கி ஆக்சிஜனை வெளியேற்றி மனித குலத்திற்கு நன்மை பயப்பது போல, எத்தனாலில் இயங்கும் எந்திரங்கள் ஆக்ஸிஜனை வெளிப்படுத்துகின்றன.

இந்தியாவில் விளைவிக்கப்படும் கரும்பு முழுமையாக சர்க்கரை உற்பத்திக்கு மட்டுமே பயன்படுகிறது. பின்னர் சர்க்கரை ஆலைக் கழிவுகளிலிருந்து மொலாசஸ், ஆல்கஹால் (எரிசாராயம்), மதுபான வகைகளும் தயாரிக்கப்படுகின்றன. இருந்த போதும் சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகச் சொல்கிறார்கள்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உள்ளது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்களுக்கு சர்க்கரையும் மலிவாக கிடைப்பது இல்லை. அவ்வப்பொழுது சர்க்கரை தட்டுப்பாடும் ஏற்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையும் இறக்குமதி செய்யும் தேவையும் ஏற்படுகிறது.

கரும்புச் சக்கையிலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும்; சர்க்கரை ஆலைகளும் லாபத்தில் இயங்கும்; சர்க்கரை விலையும் குறையும்.

மேலும் எத்தனால் உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம், புதிய தொழில் வாய்ப்புகளும், வேலை வாய்ப்புகளும் பெருகிடும். விவசாயம் லாபகரமானத் தொழிலாக மாறும்.

இந்தியாவில் கரும்பு மற்றும் மக்காச்சோளத்திலிருந்து எத்தனால் தயாரிப்பதன் மூலம், விவசாயிகள் வளமான வாழ்வைப் பெறுவார்கள்.

எத்தனால் பயன்பாட்டின் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாகக் குறைந்திடும். விலைவாசி உயர்வும் கட்டுப்படுத்தப்படும்.

எனவே, எத்தனால் எரிபொருள் பயன்பாட்டுத் திட்டம் நாடு முழுக்க விரிவடைய அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநில அரசுகளும், பொது மக்களும் முழுமையான ஒத்துழைப்பு நல்கி நம் நாட்டை வளமான தேசமாக மாற்றிட வேண்டும்.

Source:Dinamani

Friday, March 7, 2014

மரண தண்டனைக்கு மரணம்

கொடுங் குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை அமலில் உள்ள சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் கழகம் மரணதண்டனை ஒழிக்கப்ட வேண்டும் என்று 1948இல் இருந்தே வலியுறுத்தி வருகிறது.

அப்போது ஆறு நாடுகள் மரண தண்டனை இல்லாதவையாக இருந்தது. இப்போது 195 உலக நாடுகளில் 40 நாடுகளில் மட்டுமே மரண தண்டனை சட்டத்தில் அமலில் உள்ளது. கடைசியாக 2013இல் மரண தண்டனையை விலக்கிய நாடு லாட்வியா.

பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளில் அமெரிக்காவைத்தவிர மற்ற நாடுகள் மரண தண்டனையை விலக்கிவிட்டன. பின் தங்கிய நாடுகளைக் கொண்ட ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில்தான் மரணதண்டனை அதிகம். 2012இல் உலக நாடுகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 1,722. இது 2011இல் விதிக்கப்பட்ட 1,923 தண்டனைகளை விட சற்று குறைவு.

2007-12 ஐந்து வருடங்களில் சீனாவில் சுமார் 4,000 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இரானில் 1,663, சவுதி அரேபியாவில் 423, அமெரிக்காவில் 220, பாகிஸ்தானில் 171, இந்த கணக்கு "ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' வெளியிட்ட தகவலின் அடிப்படையில். தோராயமாக இருந்தாலும் மறுப்பதற்கில்லை. நமது நாட்டில் கசாப், அப்சல் குரு இருவர் தூக்கிலிடப்பட்டனர்.

தமிழ் நாட்டில் 1947இல் இருந்து இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். கடைசி தூக்கு ஆட்டோ சங்கர், வருடம் 1995, சேலம் மத்திய சிறையில். இப்போது சுமார் 8 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிலுவையில் உள்ளது.

மக்களின் வியர்வையால் செதுக்கப்பட்ட கற்களால் சிறை எழுப்பி அவர்களையே சிறையிலிட்டார்கள் ஆட்சியாளர்கள் என்ற அந்த கால அடக்குமுறை மாறி, சிறைச்சாலைகள் அறச்சாலைகளாகவும் சீர்திருத்தும் மையங்களாகவும் மாறவேண்டும் என்ற குறிக்கோள் முன்வைக்கப்பட்டுள்ளது. சிறைச் சுவர்கள் சட்டம் என்ற கற்களால் செதுக்கப்பட்டவை. மனித உரிமைகள் சிறையில் ஊடுருவ சிறைக் கதவுகள் தடையல்ல என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மரணதண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பிற்குப் பிறகு, மரண தண்டனை சட்டத்தில் இடம் பெற வேண்டுமா என்பது விவாதத்திற்கு வந்துள்ளது.

இந்தியாவில் 111 மத்திய சிறைகள் உள்ளன. எல்லா மத்திய சிறைகளிலும் தூக்கு மேடை இருக்கும். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களை குற்றவியில் சட்டம் 366(2)இன் படி சிறை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டும். சட்டப்படி சாகடிக்கப்படுவதற்காக இந்தியாவில் பிறந்த ஜார்ஜ் ஆர்வெல் என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளர் தூக்கிலிடப்படும் சடங்கை தத்ரூபமாக விவரிக்கிறார்.

தூக்கிலிடப்படும் நாள் குறிக்கப்பட்டவுடன் சிறையில் ஒரு சோகம் படர்ந்து விடும். எல்லாரையும் ஒரு பயம் பிடித்துக் கொள்ளும். மரண தண்டனைக்கு உரித்தான எந்த குற்றமாக இருந்தாலும், அதை மறந்து இறக்கப் போகிறவன் மீது ஒரு பாசம் ஏற்பட்டு விடும். நன்றாகத்தானே இருக்கிறான் அவனது அங்கங்கள், உள் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன நோய் நொடியில்லை, ஏன் அவனை வலிய கொல்ல வேண்டும் என்ற உணர்வு வரும்.

தூக்கிலிடும் நாளுக்கு முன் முழுமையான மருத்துவ பரிசோதனை செய்யப்படும். எடை உயரம் அளவு எடுத்து, அந்த எடையின் ஈடாக ஒரு மூட்டையை வைத்து தூக்கு மேடையில் ஒத்திகை நடத்தப்படும். அவனது எடையை தாங்க வல்லதாக எந்த அளவுக்கு சுருக்குக் கயிறு இருக்க வேண்டும், எந்த உயரத்தில் இருந்து கயிறு தொங்கப்பட வேண்டும் போன்றவை நிர்ணயிக்கப்படும்.

தூக்கு மேடைக்கு தண்டனை பெற்றவரை அழைத்துச் செல்லும் வழி தனி வழி. அன்று மட்டும் அந்த வழியில் கதவு திறக்கப்பட்டு மூடப்படும். கடைசி நாள் அவருக்கு விருப்பமான உணவு வழங்கப்படும். நிறைவேற்றக் கூடிய விருப்பங்கள் விதிகளுக்குட்பட்டு நிறைவேற்றி வைக்கப்படும்.

பகத்சிங் தூக்கிலிடுவதற்கு முன்பு வரை லெனில் எழுதிய "அரசும் புரட்சியும்' புத்தகத்தை தீவிரமாக படித்து முடித்துவிட்டு, தனது கடைசி உணவாக சிறையை துப்புரவு செய்யும் துப்புரவாளர் கையால் செய்த சப்பாத்தி வேண்டும் என்று கேட்டு சாப்பிட்டார் என்ற பதிவு உள்ளது. அதுதான் எத்தகைய உயர்ந்த உள்ளம்?

எவ்வளவுதான் மனதை தேற்றிக் கொண்டு தைரியமாக இருந்தாலும் கடைசி நாள் குற்றவாளிக்கு தூக்கம் வராது; மனம் அலைபாயும். அதிகாலையில் தூக்கிலிடும் சடங்கு துவங்கப்படும். தூக்கிலிடப்படுபவர் "சாலிட்டரி கன்ஃபைன்மென்ட்' என்ற தனி அறையில் வைக்கப்படுவார்.

காலையில் குளியல், பிறகு விருப்பமான உணவு உண்ட பிறகு சிறைக்காவலர்கள் அவரை "எஸ்கார்ட்' செய்ய வருவார்கள். ஆனால் அழைத்துக் செல்வது மிக சிரமம். சிறைக் கம்பிகளை பிடித்துக் கொண்டு போக மறுப்பார். நல்லதனமாக பேசி தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

மேடையில் நெம்புகோலால் இயக்கக்கூடிய இரும்பு தரையில் நிற்க வைத்து முகத்தை முதலில் துணியால் மூடி பிறகு கயிற்றை கழுத்தில் கட்டுவார்கள். அப்படிக் கட்டும்போது உடம்பு விறைக்கும், மூச்சிறைக்கும். தானாகவே கடவுள் நாமத்தை ஜபிப்பார்கள் முனகுவார்கள் அல்லது கூக்குரலிடுவார்கள்.

சிறை கண்காணிப்பாளர் தலைமையில் சிறைப் பணியாளர்கள், நெம்புகோலை இயக்குபவர், மருத்துவர் ஆஜரில் இருப்பார்கள். சிறைக் கண்காணிப்பாளர் கடிகாரத்தைப் பார்த்து எந்த நேரத்தில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவில் குறிக்கப்பட்டிருக்கிறதோ, கடிகாரமுள் அந்த நேரத்திற்கு வரும் வரை காத்திருப்பார்.

கடிகார முள் நெருங்க நெருங்க சாவை எதிர் கொள்ள முடியாது, தண்டனையாளரின் கூக்குரல் அதிகரிக்கும். எல்லார் மனதிலும் கவலை, சோகம், குற்ற உணர்வு கலந்த நிலை. மனிதர்கள் தானே. ஏதோ கடமை என்று இருந்து விடமுடியாது.

சிறை அதிகாரி கை அசைத்தவுடன் நியமிக்கப்பட்ட சிறை அலுவலர் நெம்பு கோலை மன உறுதியோடு இயக்க வேண்டும். தண்டனையாளி நின்று கொண்டிருக்கும் இரும்புத் தளம் விலக, அவர் முழுமையாக உடம்பின் பளுவில் தொங்க, கழுத்தில் கயிறு இறுக்கமாவதில் உயிர் போகும். நொடிப் பொழுதில் உயிருள்ள உடம்பு சடலமாகும்.

மருத்துவ அதிகாரி பரிசோதனை செய்து உயிர் பிரிந்து விட்டது என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். உயிரோடு சிறைக்கு வந்தவர் தண்டனை பெற்று சடலமாக வெளியில் அனுப்பப்படுவார். சடலம் வெளியேறுவதற்கும் பிரத்யேகமான தனிவழி. மற்ற நேரத்தில் உபயோகப்படுத்துவதில்லை.

சடங்கு முடிந்த பிறகு சிறையில் ஒரு மயான அமைதி. அதற்குப்பிறகுதான் அடுப்பில் உலைவைப்பார்கள். எல்லா கைதிகளும் குளித்தவுடன் உணவு கொடுக்கப்படும். சிலர் வருந்துவார்கள், சிலருக்கு விரக்தி, மற்றவர்க்கு எப்போது எல்லாம் முடியும் சாப்பாடு எப்போது கிடைக்கும் என்ற யதார்த்தம்.

தமிழ் மக்களின் உணர்வைப் புரிந்து கொண்டு மனிதாபிமான அடிப்படையில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தமிழக அரசு தண்டனையைத் தளர்த்தி ஆணை கொடுத்துள்ளது. சட்டத்தைப் புரிந்து கொள்ளாமலும், புரிந்ததை திரித்தும் காழ்ப்புணர்ச்சியால் விதண்டாவாதத்தில் சிலர் இறங்கியுள்ளது வருந்தத்தக்கது. வாதம் என்று வந்தால் இலங்கைத் தமிழர் பிரச்னையை முழுமையாக ஆராய வேண்டும். இந்த தண்டனை தளர்ச்சியை மட்டும் தனியே பார்க்கலாகாது.

1970, 80களில் நடந்த இனப்படுகொலைகள், அதற்குப் பிறகு தமிழகம் வந்த அகதிகள், அமைதிகாக்க என்று இந்திய ராணுவம் அனுப்பியதின் விளைவுகள், இலங்கை தமிழர் விடுதலை இயக்கங்களின் நடவடிக்கைகள், அவர்களை சுய ஆதாய நோக்கோடு ஆதரித்தவர்களின் பின்னணி, சமீபத்திய இனப்படுகொலைகளின் தாக்கம், இந்தியாவின் கண்ணோட்டம், கொள்கை, நிலைப்பாடு என்று கணக்கிலடங்காத வாதங்கள் இருக்கின்றன.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முடிவின்றி காலதாமதம் ஏற்பட்டால் அதுவே மரணதண்டனையை தளர்ப்பதற்கான காரணமாகும் என்று உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது.

பல வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசி வழக்கைவிட கொடுமையான குற்றத்தை நினைத்துப்பார்க்க முடியாது. அதில் தாமதம் காரணமாக மரணதண்டனை ரத்தானது.

மரண தண்டனைப் பற்றி காந்திஜி கூறுகிறார். "எந்த ஒரு குற்றவாளியையும் கழு வேற்றுவதற்கு எனது மனசாட்சி எந்த நிலையிலும் இடம் கொடுக்காது. கடவுள் கொடுத்த உயிரை இயற்கைக்குத்தான் எடுக்க உரிமை உள்ளது'.

மரண தண்டனை சட்டத்திலிருந்து நீக்குவது தான் நாட்டின் ஒருமித்த முடிவாக இருக்க முடியும் என்று அம்பேத்கரும், மரண தண்டனை குற்றங்களுக்கு தீர்வு அல்ல என்று ஜெயப் பிரகாஷ் நாராயணனும் அறிவுறுத்தியுள்ளார்கள்.

மரண தண்டனை கழுவேற்றப்பட வேண்டும்.

Source:Dina Mani

வீணாகும் விளைபொருள்கள்


நம் நாட்டில் 2005 முதல் 2013 வரையிலான எட்டாண்டு காலத்தில் 1.94 லட்சம் டன் உணவு தானியம் வீணாகியுள்ளதாக, இந்திய உணவுக் கழகம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் கூறுகிறது. நாட்டின் 23 பகுதிகளில் எவ்வளவு டன் உணவு தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை இக்கழகம் வெளியிட்டுள்ளது. இதில் அரிசியும், கோதுமையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கோதுமை உற்பத்தியின் கேந்திரமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியத்தில் பாதியளவுக்கு வீணாகியுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய விவசாயத் துறை அமைச்சர் சரத் பவார், கடந்த ஆண்டில் 255 மில்லியன் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி, நடப்பு ஆண்டில் 263 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது என தெரிவித்திருக்கிறார். ஆனால், விளையும் தானியத்தை முறையாகச் சேகரித்து, பொதுமக்களுக்கு முறையாக கொண்டு சேர்க்கும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது.

அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாததே அதிக அளவில் தானியம் வீணாவதற்கு காரணம். மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தற்போதைய உணவு தானிய உற்பத்தி 263 மில்லியன் டன். 2030-ல் இதன் தேவை 345 மில்லியன் டன்னாக இருக்கும். அதாவது, இப்போதிருந்தே ஆண்டுக்கு சுமார் 5.5 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

ஒரு பொருள், விளைநிலத்திலிருந்து வியாபாரியின் கைக்கு சென்று, அங்கிருந்து அது நுகர்வோரின் கைக்கு மாறும்போது, சுமார் 50 சதவீத அளவுக்கு வீணாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதாவது, உற்பத்தி நிலை, பதப்படுத்துதல், விற்பனை மையம் என சங்கிலித் தொடர் நடவடிக்கையில் ஒவ்வொரு இடத்திலும் பொருள் வீணாவது தவிர்க்க முடியாதது என ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வளரும் நாடுகளில், உற்பத்தி நிலையிலேயே விளைபொருள்கள் வீணாகின்றன என்றும், வளர்ந்த நாடுகளில் தயாரிக்கப்பட்ட நிலையில் அவை அதிகம் வீணாகின்றன என்றும் தெரிவிக்கின்றனர். தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை பேக்கிங் செய்து விற்பனைக்காக குளிர்சாதனப் பெட்டிகளில் மாதக் கணக்கில் வைக்கின்றனர். அவை விற்பனையாகாத நிலையில் வீணாகின்றன.

மேலும், பயிர்களை அறுவடை செய்ய இயந்திரங்களை பயன்படுத்துவதாலும், தானியங்கள் வீணாவதாகக் கூறப்படுகிறது. தானியங்களை மதிப்புக்கூட்டுப் பொருளாக மாற்றி, தரமானதாக வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டுமானால், சேதாரம் தவிர்க்க முடியாது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் ஆண்டுக்கு 1.3 பில்லியன் டன் உணவு தானியம் வீணாகிறது. இதில் வளர்ந்த நாடுகளில் வீணாகும் அளவு சற்றுக் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் உணவு தானிய உற்பத்தி எப்படி இருக்கும் என்பதை வேளாண் துறையினர் கணிக்கின்றனர். ஆனால்,உற்பத்தி அதிகரித்தால், அந்த தானியங்களை முறையாகச் சேமிக்க உரிய வழிவகை நம்மிடம் இல்லை.

உற்பத்தி செய்த பொருளை ஏற்றுமதி செய்யலாம் என்றால், அரசின் வர்த்தகக் கொள்கைகள் முட்டுக்கட்டையாக உள்ளன. இப் பிரச்னை விரைவில் களையப்பட வேண்டும்.

நாட்டில் உணவு பதப்படுத்துதல் துறை பெரிய அளவில் செயல்பட்டு வருகிறது. சுமார் 66 லட்சம் பேர் இத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தாலும், உற்பத்தியாகும் உணவு தானியங்கள், காய்கறி, பழங்கள், இறைச்சி, பால் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, பதப்படுத்தும் அளவு குறைவாகவே உள்ளது. இதை அதிகப்படுத்தினால், வீணாவதைத் தடுக்கலாம்.

மேலும், விளைந்த பொருள்களை சேமிக்க உரிய கிடங்கு வசதிகளை நவீன தொழில்நுட்பத்துடன் அந்தந்த பகுதியில் ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒவ்வோர் ஆண்டும் நிதிநிலை அறிக்கையில், நவீன சேமிப்புக் கிடங்குகள் அமைக்க இத்தனை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கிறார்களே தவிர, அது செயல்பாட்டுக்கு வருவதில்லை.

மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படும் தானியக் கிடங்குகள் பலவும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. கிடங்கு வசதி இல்லாததால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்கள் மழையிலும், வெயிலும் கிடந்து வீணாகின்றன. இதனால், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்த நேரிடுகிறது.

விலையை அதிகரிக்கும் நோக்கில், பொருள்களைச் சேமித்து, சந்தையில் தேவையை உருவாக்கி, அதிக விலைக்கு விற்கும் கலாசாரமும் அதிகரித்து வருகிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டும்.

மழையின்றி, அதனால் உரிய நீரின்றி கருகும் பயிரைக் கண்டு கண் கலங்கி நிற்கும் விவசாயி, ஏதோ கொஞ்சம் விளைந்ததை சந்தைக்கு அனுப்பும்போது, அவையும் வீணானால்...?

Source:Dina Mani